கடன் வழங்கும் முறை
பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்குவதற்கும், வசூல் செய்வதற்கும், கீழ்க்காணும் நிறுவனங்கள் இக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட துணை முகவர்களாக செயல்படுகின்றன.
- மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் / நகர கூட்டுறவு வங்கிகள்.
- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் தொகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள், சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் பரிசீலனை செய்யப்படும். பயனாளியின் செயல்பாடு, தகுதி மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறன் குறித்து ஆய்வு செய்து பின்னர் விண்ணப்பங்கள் மாவட்ட அளவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான கூர்ந்தாய்வுக் குழுவின் முன் வைக்கப்பட்டு, அக்குழு கடன் வழங்குவதற்கான பரிந்துரையை வழங்கும்.
மாவட்ட கூர்ந்தாய்வுக் குழு உறுப்பினர்கள்
- கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (தலைவர்)
- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ( ஒருங்கிணைப்பாளர் )
- பொது மேலாளர், மாவட்ட தொழில் துறை மையம் (உறுப்பினர்)
- சிறப்பு அலுவலர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (உறுப்பினர்)
- திட்ட அலுவலர், தமிழ்நாடு, மகளிர் மேம்பாட்டு கழகம் (உறுப்பினர்)
- சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளின் பிரதிநிதி (உறுப்பினர்)
- சுய உதவிக்குழுக்களின் பிரதிநிதி (உறுப்பினர்)
கடன் தொகையினைத் திரும்பச் செலுத்துதல்
கடன் திட்டங்களின் கீழ் இரண்டு மாதங்கள் கடனைத் திரும்பச் செலுத்துவதற்குரிய தவணையுரிமை காலமாக அனுமதிக்கப்படும். கடன் தொகையினை, திட்டத்தினைப் பொறுத்து, மாதாந்திரம்/காலாண்டு அடிப்படையில் ஒப்பளிப்பு ஆணையில் குறித்தவாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குத் திரும்பச் செலுத்திட வேண்டும்.
அபராத வட்டி
கடன் தொகையினை தவணை தேதியில் திரும்பச் செலுத்தாதவர்களிடமிருந்து ஆண்டுக்கு 5% அபராத வட்டி வசூலிக்கப்படும்.
கடன் தொகை அட்டை பராமரிப்பு
கடன் வழங்கப்பட்டவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு கடன் தொகை அட்டை வழங்கப்படும். கடன் பெற்றவர் ‘கடன் அட்டையை’ ஒவ்வொரு தவணையும் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தும்போதும், தேவையான குறிப்புகள் செய்யும் பொருட்டு வங்கிகளுக்கு காண்பிக்க வேண்டும்.